சிறந்த முறையில் முட்டைகோஸ் பயிரிடுவது மற்றும் பாதுகாப்பது எப்படி? முட்டைகோஸின் பயன்கள் என்ன?


முட்டைகோஸ் வரலாறு


முட்டைகோஸ் முழுவதுமே இலைகளால் ஆன ஒரு காய்கறியாகும். மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று முட்டைகோஸ். கி.மு. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.


சீனா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட முட்டைகோஸ் 1794-ம் ஆண்டில்தான் இந்திய மக்களுக்கு அறிமுகமானது. உலகளவில் அதிகமாக முட்டைகோஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இமாச்சல பிரதேசம், தமிழகம் ஆகிய இடங்களில் முட்டைகோஸ் அதிகமாக பயிரிடப்படுகிறது.


முட்டைகோஸ் பயிரிடுவது  எப்படி?


இரகங்கள்


மலைப்பகுதி இரகங்கள்


செப்டம்பர் எக்லிப்ஸ், பூசா ஒண்டர், பிரைடு ஆஃப் இந்தியா, ஏர்லி ஒண்டர், பூசா ட்ரம்ஹெட், .எஸ் இராஸ் போன்றவை மலைப் பகுதிக்கான இரகங்கள் ஆகும்.


சமவெளி பகுதி இரகங்கள்


ஏர்லி ஆட்டம் ஜெயண்ட், லார்ஜ் சாலிட், லேட் ட்ரம்ஹெட், கோல்டன் ஏக்கர், ஜெயின், மகாராணி போன்ற ரகங்கள் சமவெளியில் பயிரிட ஏற்றவை.



முட்டைகோசுக்கு ஏற்ற மண்வகை


சமவெளி பகுதிகளில் இது குளிர்காலப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 வரை உள்ள நிலங்கள் ஏற்றவை.


முட்டைகோசுக்கு ஏற்ற பருவம்


இது பொதுவாக குளிர் கால பருவங்களில் பயிரிடப்படுகிறது. மலைப்பகுதி: ஜனவரி-பிப்ரவரி, ஜீலை-ஆகஸ்ட் மாதங்கள் ஏற்றது. சமவெளிப்பகுதி: ஆகஸ்ட்செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.


விதையளவு


ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய 250 கிராம் விதைகள் போதுமானது. நாற்றங்கால் அமைத்து தொழுஉரம், மண்புழு உரம் போன்றவற்றைப் போட்டு விதைப்படுக்கை அமைக்கவேண்டும்.


நாற்றங்கால் அமைப்பு முறை


நாற்றங்கால் போடுவதற்கு 100 சதுர அடி நிலம் இருந்தாலே போதுமானது. 15 செ.மீ. உயரம், 1 மீ அகலம், தேவையான அளவு நீளம் கொண்டு விதைப்படுக்கையை உருவாக்கலாம். 2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 40 கிராம் வி.ஏ.எம் போன்றவற்றை ஒரு சதுர அடிக்கு அளிக்க வேண்டும். விதைப் படுக்கைகளில் 10 செ.மீ இடைவெளி விட்டு விதைகளை விதைக்க வேண்டும் .


நிலம் எவ்வாறு தயார் செய்வது?


நிலத்தை பண்பட உழ வேண்டும். மலைப்பகுதிகளில் 40 செ.மீ. இடைவெளி விட்டு குழி தோண்ட வேண்டும். சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ அளவுள்ள பார் அமைக்க வேண்டும்.


விதை எவ்வாறு விதைப்பது?


மலைப்பகுதிகளுக்கு 40X40 செ.மீ இடைவெளியிலும், சமவெளிப்பகுதிகளுக்கு 45X30 செ.மீ இடைவெளியிலும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.


நீர் பாசனம் செய்யும் முறை


முட்டைகோஸ் பயிரைப் பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும்.


முட்டைகோஸ் உரங்கள்


மலைப்பகுதிகளுக்கு அடியுரமாக தலா 90 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து தலா 45 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும்.



சமவெளிப்பகுதிகளுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும். பஞ்சகாவ்யாவை (3%) பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.


வெர்மிவாஷ் 10 சதவிகிதம் பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். பயிரிட்ட பின் ஆழமாக தோண்டுவது மற்றும் களை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.


முட்டைகோஸ் பாதுகாப்பு முறைகள்


களை நிர்வாகம்


செடிகள் வளரும் பருவத்தில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.


வெட்டுப் புழுக்கள்


விளக்குப் பொறியை கோடைக் காலத்தில் வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம். பைரித்ரம் கொல்லி, கோதுமைத் தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.


அசுவினிகள்


வேப்ப எண்ணெய் 3% தெளிக்க வேண்டும். வேப்ப இலை சாற்றை 10% பயிரிட்ட 45, 60, 75 வது நாளில் தெளிக்கலாம். இனக்கவர்ச்சி பொறியை ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வயலில் பொருத்தலாம்.



வேர்முடிச்சு நோய்


நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து நாற்றுக்களை நனைத்து விதை நேர்த்தி செய்யலாம். டோலமைட் ஒரு எக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் அளிப்பதால் மண்ணின் கார அமிலத் தன்மையை அதிகரிக்கலாம்.


இலைப்புள்ளி நோய்


5% மஞ்சூரியன் தேயிலைச் சாற்றை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும். பஞ்சகாவ்யா 3 சதவிகிதம் பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.


இலைக் கருகல் நோய்


200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கரைத்து 15 நாட்கள் ஊற வைத்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். விதைத்த ஒரு மாதத்திலிருந்து ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.


கருப்பு அழுகல் நோய்


கருப்பு அழுகல் நோயை கட்டுப்படுத்த ஸ்டரப்டோமைசின் 100 பிபி.எப் பயிரிட்ட பிறகு 2 முறை தெளிக்க வேண்டும்.


எப்போது அறுவடை  செய்யவேண்டும்?


நட்ட 75 வது நாளில் அறுவடைக்கு வந்து விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் அறுவடை செய்யவேண்டும். 120 நாட்களில் சுமார் எட்டு முறை வளர்ச்சியடைந்த முட்டைக்கோசுகளைப் பறிக்கலாம். முட்டைக்கோஸ் நன்றாக வளர்ச்சி பெற்று முற்றாமல் இருக்கும் தருவாயில் அறுவடை செய்யவேண்டும்.


மகசூல் எவ்வளவு கிடைக்கும்?


மலைப்பகுதிகளில் 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70-80 டன்கள் கிடைக்கும். சமவெளிப்பகுதிகளில் 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25-35 டன்கள் கிடைக்கும்.


முட்டைகோஸ் பயன்கள்


1. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.


2. மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.


3. சரும வறட்சியை நீக்கி சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.



4. எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். நரம்புகளுக்கு வலு கொடுத்து நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.


5. தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


6. முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.


மேலும் படிக்க....


26 கிலோ எடை கொண்ட உலகிலேயே குள்ளமான பசு- வெறும் 51 சென்டிமீட்டர்தான் அதன் உயரம்!


ஒரு கிலோ திராட்சையின் விலை ரூ7.5 லட்சத்திற்கு விற்பனை உலகிலேயே மிக விலை உயர்ந்த 'ரூபி ரோமன்' திராட்சை!!


இயந்திர நெல் நடவு செய்ய எக்டேருக்கு ரூ.5000 மானியம்!! விவசாய ஆர்வலர் குழுவுக்கு ரூ.6000 மானியம்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post