காய்கறி பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2,500 மானியம்!!



காய்கறி பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2,500 மானியம்!!

கோவை மாவட்டத்தில் அன்னுார் ஒன்றியத்தில் காய்கறி பயிரிடுவோருக்கு 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தலா ரூ.2 லட்சம் மானியம்

தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் அன்னுார் ஒன்றியத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காரேகவுண்டன் பாளையம் ஊராட்சிகளிலும், அன்னுார் பேரூராட்சியிலும், தலா இரண்டு லட்சம் ரூபாய் மானியத்தில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.


50% மானியம் (50% subsidy)

மேலும், நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க ஒட்டர்பாளையம், காரே கவுண்டன்பாளையம் ஊராட்சிகளில், நான்கு பேருக்கு, தலா, 50 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.


மண்புழு உர கூடாரம்

கஞ்சப்பள்ளியில் நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி,நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அவர் கூறியதாவது:

நீர் பாசனம்  அமைக்க

நீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.


காய்கறி பயிரிட்டால்

காய்கறி பயிரிடுவோரை ஊக்குவிக்க, ஒரு எக்டருக்கு, 2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


சான்று பெற உதவி

ரசாயனம் கலக்காமல், இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க, அவர்கள் அங்ககச் சான்று பெற ஆகும் தொகை வழங்கப்படுகிறது.


மானியம்

பண்ணைக் குட்டை, நீர் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதைப் பயன்படுத்தி பயன் பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார். ஆய்வின் போது, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மதுபாலா, அனிஷா பேகம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ரவிக்குமார், கருப்பசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


காய்கறி பயிர்களில் எப்போது அறுவடை செய்தால் தரமான விதைகள் கிடைக்கும்?

காய்கறிப் பயிர்களைப் பொருத்தவரை, விதை உற்பத்தியின் போது நாம் எவ்வாறு நாம் கவனம் செலுத்துகிறோமோ அதே போன்று சரியான நேரத்தில் அறுவடை செய்வதிலும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நல்லத் தரமான விதைகள்தான் நல்ல மகசூலை அளிக்க வல்லது. எனவே, விதையை விதைப்பதற்கு முன்பு அதன் தரத்தை பரிசோதித்து அறிந்துகொள்வது மிக மிக இன்றியமையாதது. அந்தவகையில் காய்கறிப் பயிர்களை எப்போது அறுவடை செய்தால், நல்லத் தரமான விதைகளைப் பெறமுடியும் என்பதைப் பார்ப்போம்.


நிறம் மாறும் அறிகுறிகள்

காய்கறி பயிர்களில் பயிர் வினயியல் முதிர்ச்சி தருணத்தில் நிறம் மாறும் அறிகுறிகளை வைத்து நாம் அறுவடை செய்யலாம். அப்பொழுது நமக்கு நல்ல திறட்சியான, அதிக முளைப்புத் திறன் மற்றும் வீரியமுள்ள விதைகள் கிடைக்கும்.

மிளகாய்

மிளகாய்கள் பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறி இருக்க வேண்டும். இந்த தருணத்தில் அறுவடை செய்வது சிறந்தது.


கத்திரிக்காய்

கத்திரிக்காய் பச்சை, ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறி இருக்க வேண்டும். அவ்வாறு மாறும்போது அறுவடை செய்தால், சிறந்த முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெற முடியும்.


தக்காளி

தக்காளிப் பழங்கள் பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாகவும், பழங்கள் மென்மையாகவும் இருக்க வேண்டியது அவசியம். இந்த சமயத்தில் தக்காளிப்பழங்களை அறுவடை செய்வதன் மூலம் வீரியமுள்ள விதைகளைப் பெற முடியும்.


வெண்டைக்காய்

வெண்டைக்காய்கள் பச்சை நிறத்தில் இருந்து வெளிறிய பழுப்பு நிறமாக மாறி இருக்க வேண்டும். மேலும் காய்களின் முகடுகளில் மயிரிழைக் கோடு விரிசல்கள் காணப்படும் போது அறுவடை செய்ய வேண்டும். இந்த சமயத்தில், வெண்டைக்காய்களை அறுவடை செய்தால், அதிக மகசூல் கொடுக்கக்கூடிய முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெற இயலும்.

கூடுதல் விவரங்களுக்கு

அருப்புக்கோட்டைவேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர்களான முனைவர்..வேணுதேவன், முனைவர்.ஜெ.ராம்குமார் முனைவர்.சி.ராஜபாபு மற்றும் கோமுனைவர்.ஸ்ரீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

1 Comments

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...